தொகுப்பு வீடுகளை சீரமைக்கக் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நரிக்குடி அருகே ஆவாரங்காடு காலனியில் 1986-ல் 30 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. மக்களும் குடியிருந்து வந்தனர். இந்த வீடுகள் குடியேறிய சில ஆண்டுகளிலேயே சேதமடைய ஆரம்பித்து விட்டன. மக்கள் முடிந்த வரையிலும் தங்கள் சொந்த பணத்தை வைத்து மராமத்து வேலை செய்து குடியிருந்து வந்தனர். தற்போது பல வீடுகள் முற்றிலும் இடிந்து விட்டன.

வீடு இழந்தவர்களில் சிலர் ஊரை விட்டே வெளியேறி விட்டனர். இன்னும் சில வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. வேறு வழியில்லாததால் ஆபத்து என தெரிந்தும் குழந்தைகளோடு இங்கேயே வசிக்கின்றனர்.

மழைக்காலங்களில் மழைநீர் முழுவதுமாக வீட்டிற்குள் விழுகிறது. மற்ற காலங்களில் வீட்டிற்கு வெளியே தூங்கி விடுகின்றனர். ஆனால் மழைக்காலங்களில் வெளியேயும் தூங்க முடியாமல், வீட்டிற்கு உள்ளேயும் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மழைக்காலத்தில் தண்ணீர் விழுவதுடன் வீட்டின் மேற்கூரை இடிந்து விடும் என்ற அச்சத்தில் உள்ளே செல்வதில்லை. வீட்டின் மேற்கூரை, தரைத்தளம், பக்கசுவர்கள் என அனைத்துமே சேதமடைந்துள்ளன.

இதுபற்றி சங்கர் என்பவர் கூறுகையில், தொகுப்பு வீடுகள் கட்டப்பட்ட ஆரம்பத்தில் நன்றாக இருந்தன. நாளடைவில் சேதமடைந்து விட்டன. கட்டி 30 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் வீட்டினை மராமத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com