விருதுநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பருத்தி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விருதுநகர், வீரசெல்லையாபுரம், ஆமத்தூர், குமாரலிங்காபுரம், பாலவநத்தம், மெட்டுக்குண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், விருதுநகரை சுற்றியுள்ள பகுதிகளில் குறைவான மழை பெய்ததால் கண்மாய், குளங்களில் மிகக் குறைந்த அளவு தண்ணீரே தேங்கியது. மேலும், வானம் பார்த்த பூமியான மானாவாரி பகுதிகளில் பயிரிடப்பட்ட பருத்தி, தற்போது விளைந்து வருகிறது.
இதனால், பருத்தி எடுக்கும் பணியில் ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமாக, ஏக்கருக்கு 15 குவின்டால் வரை பருத்தி சாகுபடி எடுப்பார்களாம். தற்போது, போதி மழை இல்லாத காரணத்தால் ஏக்கருக்கு 8 முதல் 9 குவின்டால் வரையே பருத்தி கிடைக்கிறதாம். மேலும், ஒரு குவின்டால் பருத்தி ரூ. 3,800-க்கும் குறைந்த விலைக்கே வியாபாரிகள் வாங்கிச் செல்வதால், நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். உழவு, உரம், மருந்து அடித்தல் என ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். ஆனால், லாபம் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, அரசு சார்பில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.