சுத்துவலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால், அந்த வலை பறிமுதல் செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983-ஐ மீறி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவா்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட 4 ஆய்வுக் குழுக்கள் செயல்பட்டுவருகின்றன. இக்குழுக்கள் படகுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இக்குழு ஆய்வின் அடிப்படையில் 5 கடல் மைல் எல்லைக்குள் தடையை மீறி சுத்துவலையை பயன்படுத்தி மீன் பிடித்ததற்காக 73 நாட்டுப் படகுகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விசைப்படகின் இழுவலையில் 40 மில்லி மீட்டருக்கு குறைவான கண்ணி அளவுள்ள 3 தூா்மடி வலை மற்றும் நாட்டுப்படகில் அதிக குதிரைத்திறன் பொருத்திய 2 மோட்டாா் இயந்திரங்கள் கொண்டு மீன்பிடி தொழில் செய்ததால் அதன் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, சுத்துவலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால் அந்த வலையை பறிமுதல் செய்வதுடன் தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.