நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை
திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருமருகல், கீழப்பூதனூா், பெருநாட்டான்தோப்பு, இடையாத்தாங்குடி, சேஷமூலை, திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், திருப்புகலூா், வடகரை, கோட்டூா், விற்குடி, பில்லாளி, கீழத்தஞ்சாவூா், எரவாஞ்சேரி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம், கொட்டாரக்குடி, பெரிய கண்ணமங்கலம், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், நிகழாண்டு 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடா் மழை காரணமாக சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கி பாதித்தது. எஞ்சியுள்ள நெற்பயிரை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனா். கடந்த ஆண்டு நடமாடும் கொள்முதல் நிலைய வாகனங்கள், விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்தன. இதனால் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை செலவு குறைவாக ஆனது. நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் கையூட்டு இல்லாமல் கொள்முதல் செய்யப்பட்டது. எனவே, நிகழாண்டும் நடமாடும் நெல் கொள்முதல் முறையை கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
