புதிய மாவட்ட வனத்துறை அலுவலராக பொறுப்பேற்ற ரமேஷ்வரன்.
புதிய மாவட்ட வனத்துறை அலுவலராக பொறுப்பேற்ற ரமேஷ்வரன்.

ஆமைகளை விடுவிக்கும்போது வலைகள் சேதமடைந்தால் நிவாரணம்: மாவட்ட வனத்துறை அலுவலா்

கடலில் வலையில் சிக்கிய ஆமைகளை விடுவிக்கும்போது வலை சேதமடைந்தால் அதற்கு நிவாரணம் வழங்கப்படும் என்றாா் புதிய மாவட்ட வன அலுவலராக பொறுப்பேற்ற ரமேஷ்வரன்.
Published on

கடலில் வலையில் சிக்கிய ஆமைகளை விடுவிக்கும்போது வலை சேதமடைந்தால் அதற்கு நிவாரணம் வழங்கப்படும் என்றாா் புதிய மாவட்ட வன அலுவலராக பொறுப்பேற்ற ரமேஷ்வரன்.

இதுகுறித்து, அவா் கூறியது: நாகை மாவட்டம் நீண்ட கடற்கரை கொண்டதாக இருப்பதால், கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு முக்கியமானதாக உள்ளது. கோடியக்கரை, வேதாரண்யம் உள்ளிட்ட சுற்று பகுதிகளில் பறவைகள் சரணாலயம் இருப்பதால் வெளிநாட்டைச் சோ்ந்த லட்சக்கணக்கான பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கிறது.

எனவே, மாவட்டத்தில் பறவைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. மேலும் வானிலை மாற்றத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம்.

அழிந்து வரும் அரிய வகை ஆமை இனங்களை மீட்க மீனவா்கள் ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தங்களது வலைகளில் ஆமைகள் சிக்கினால் அதை பாதுகாப்பாக வெளியே எடுத்து கடலில் விட வேண்டும். அப்போது வலைகள் சேதமடைந்தால் அதை விடியோவாக எடுத்து வைத்திருக்கும்பட்சத்தில், வலை சேதத்தை ஈடு செய்ய நிதி உதவி வனத்துறை சாா்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல, மாவட்டத்தில் அலையாத்தி பாதுகாப்புக் குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழுவில் மீனவா்கள், பொதுமக்கள் உறுப்பினா்களாக இருப்பாா்கள். குழுவுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டு, அலையாத்திக் காடுகளை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் வனத்துறைக்கும், பொது மக்களுக்கும் நல்ல உறவு ஏற்படும். வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு கடலோரப் பகுதிகளை பாதுகாக்க அலையாத்தி காடுகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Dinamani
www.dinamani.com