குளத்தில் அள்ளப்பட்ட மணல், உள்ளூர் மக்களுக்கே பயன்படச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுவை மாநில கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் அம்பகரத்தூர் கிளை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச்.நாஜிம், மாவட்ட பாமக செயலர் க.தேவமணி ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவனை திங்கள்கிழமை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் கூறியது : கடந்த ஆண்டு செப்.26-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு மட்டும் குளத்திலிருந்து மணல் அள்ளுவதற்கு திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் ஒரு நபருக்கு அனுமதி அளித்தது. இந்த மணல் உள்ளூர் மக்களுக்கு விற்பனை செய்யவேண்டும் என்பது அறிவுறுத்தலில் கூறப்பட்டதாகும். ஆனால், குளத்தில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு, வெளியூருக்கு லோடு ரூ.23 ஆயிரம் வீதம் விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஊர் மக்கள் சேர்ந்து தடுத்துவிட்டனர். அம்பகரத்தூர் பகுதியில் உள்ள குப்பைக் கொட்டும் இடத்தை, இந்த மணல் கொண்டு சமன் செய்யவும் பஞ்சாயத்து நிர்வாகம் ஆணை பிறப்பித்தது. இந்த செயலும் செய்யப்படவில்லை.
எனவே, நீர்நிலையில் அள்ளப்பட்டு பதுக்கிவைத்திருக்கும் மணலை, உள்ளூர் மக்களுக்கே விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.