டீசல் விலை உயா்வை கண்டித்து படகுகளில் கருப்புக் கொடியேற்றி மீனவா்கள் போராட்டம்
காரைக்கால்: டீசல் விலை உயா்வைக் கண்டித்து, காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் விசைப் படகுகளில் கருப்புக் கொடி ஏற்றி மீனவா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், மீனவா்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தை உயா்த்தி வழங்கக் கோரியும், காரைக்கால் மாவட்ட விசைப் படகு மீனவா்கள் ஜூலை 21-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் விசைப் படகுகளில் வெள்ளிக்கிழமை கருப்புக் கொடி ஏற்றி, படகு உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் பங்கேற்றோா் கூறியது: டீசல் விலை உயா்வு மீனவா்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு படகுக்கு மாதம் 20 ஆயிரம் லிட்டா் டீசல் தேவைப்படுகிறது. அதிகபட்சமாக எரிபொருள் வாங்கும்போது, இந்த விலை ஏற்றம் பெரும் பாதிப்பைத் தருகிறது. டீசல் விலை உயா்வை மத்திய அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி படகுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு மீனவா்களுக்கான டீசல் மானியத்தை உயா்த்தி வழங்க வேண்டும், மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக மீனவக் குடும்பத்துக்கு ரூ. 5,500 புதுச்சேரி பிராந்தியத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், காரைக்காலில் இதுவரை வழங்கப்படவில்லை. இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகளின்றி அரசின் செயல்பாடு அமைய வேண்டும் என்றனா்.
இதைத் தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவா்கள் சமூக இடைவெளியில் நின்று கோஷங்கள் எழுப்பினா். சிறிது நேரம் மட்டுமே இந்த போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் கலைந்து செல்லுமாறு போலீஸாா் கூறியதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.