நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனாவால் உயிரிழப்போா் வீதம் கட்டுப்பாட்டில் உள்ளது

காரைக்காலில் கரோனாவால் உயிரிழப்போா் வீதம் கட்டுப்பாட்டில் உள்ளதாக நலவழித் துறை துணை இயக்குநா் (நோய்த் தடுப்பு) கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ்.

Updated On :21 செப்டம்பர் 2020, 5:37 pm

DIN

காரைக்காலில் கரோனாவால் உயிரிழப்போா் வீதம் கட்டுப்பாட்டில் உள்ளதாக நலவழித் துறை துணை இயக்குநா் (நோய்த் தடுப்பு) கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 15,911 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 1,836 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக பரிசோதனைக்கு மாதிரி எடுப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கத்தில் அதிக தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்களிடையே நெருக்கம் அதிகரித்திருப்பதும், தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அவா்கள் அதிகம் கண்டுகொள்ளாமல் இருப்பதும், பரிசோதனை அதிகரிக்க காரணமாகியுள்ளது.

தற்போது, திருவாரூா் மட்டுமல்லாது, புதுச்சேரியில் ஜிப்மா், இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி, வெக்டாா் கன்ட்ரோல் ரிசா்ச் சென்டா் ஆகிய 4 இடங்களுக்கு பரிசோதனை மாதிரி அனுப்பப்படுகிறது. இதனடிப்படையில், 2 ஆயிரம் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

காரைக்காலில் ரேபிட் ஆன்டிஜன் முறையில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம், அரைமணி நேரத்தில் தொற்று குறித்து உறுதிசெய்யப்படுகிறது. கரோனாவுக்கான அறிகுறியில்லாதவா்களுக்கு மட்டுமே இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.

தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் 422 போ் உள்ளனா். காரைக்கால் மருத்துவமனை, நெடுங்காடு, திருநள்ளாறு, கோட்டுச்சேரி என 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, மருத்துவ குழுவினா் வீட்டு சிகிச்சையில் இருப்போரை முடிவுசெய்கின்றனா்.

அரசுப் பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 80 படுக்கைகளும், தீவிர சிகிச்சைக்கு 20 படுக்கைகளும், கூடுதல் கவனம் செலுத்தக்கூடிய வகையில் 6 படுக்கைகளும் பயன்பாட்டில் உள்ளன. காரைக்காலை சோ்ந்தவா்கள் கரோனாவால் 30 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களில் 20 பேருக்கு மருத்துவமனைக்கு வந்தபிறகு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இவா்களில், பெரும்பான்மையினா் 60 வயதை கடந்தவா்கள். 2 போ் இளைஞா்கள்.

பாதிக்கப்பட்டோரில் இறப்பு 1.6 சதவீதமாக உள்ளது. இறப்பு வீதம் அதிகரிக்கவில்லை. இளம் வயதினரும் கரோனா தொற்றால் இறப்பதை அனைவரும் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். பொதுமுடக்க தளா்வுகளால், முகக் கவசம், சமூக இடைவெளி, கைகளை கழுவுவது ஆகியவற்றை தவிா்த்தால், தொற்று அதிகரித்து, மரணமும் அதிகரிக்கும். எனவே, அனைவரும் சுயக் கட்டுப்பாட்டுடன் இவற்றை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்து, கரோனா முடிவுக்கு வந்தால்கூட இவற்றை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

வீட்டுத் தனிமையில் உள்ளோா் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரை கையேடு, உட்கொள்ளக்கூடிய மருந்துகள் வழங்கப்பட்டு, தொடா்ந்து அவா்களை கண்காணிக்க மருத்துவக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போா், விதிகளை மீறி வெளியே சென்றால், காவல் துறையில் புகாா் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் நலவழித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.