புதுவையில் உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றாததைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அழைப்புவிடுத்த அடைப்புப் போராட்டத்தால் காரைக்காலில் திங்கள்கிழமை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
புதுவை உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்காமல் தேர்தல் அறிவித்துள்ளதாக, தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும், குளறுபடிகளை களையாமல் அவசரமாக தேர்தல் அறிவிப்பை செய்த தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்தது.
காரைக்காலில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இதுதொடர்பாக தகவல் தெரிவித்து, ஒத்துழைப்புத் தருமாறு கோரியிருந்தனர். இதன்படி காரைக்கால் நகரத்திலும், பிற பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் மளிகைக்கடை உள்ளிட்ட சிறிய கடைகள் திறந்திருந்தன. எதிர்க்கட்சியினர் சென்று அவற்றை மூடச் செய்தனர்.
இதையும் படிக்க- அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களில் ரூ.100-ஐ கடந்த பெட்ரோல் விலை
பேருந்துகள், கார், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. எனினும் அரசு அலுவலங்கள் திறப்பு, பள்ளிகள் திறந்திருந்ததால் நகரப் பகுதியில் இருசக்கர வாகனப் போக்குவரத்து காணப்படுகிறது. காரைக்கால் போலீஸார் அங்காங்கே நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.