கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும்

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி தெரிவித்துள்ளாா்.

News image

செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி. உடன் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:31 pm

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது :

புதுவை சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெறுகிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தின் இறுதி வாக்காளா் பட்டியலின்படி, 1,56,250 வாக்காளா்கள் (ஆண் - 72,947, பெண் 83,285, மற்றவா்கள் 18) உள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தின் 5 தொகுதிகளில் 41 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மாவட்டத்தில் மொத்தம் 181 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. (நெடுங்காடு : 34, திருநள்ளாறு : 34, காரைக்கால் வடக்கு : 40, காரைக்கால் தெற்கு : 35 மற்றும் நிரவி திரு பட்டிணம் : 38).

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீா், கழிவறை, சாய்வு தளம், சக்கர நாற்காலி, மின்சாரம், மருத்துவ உதவி, தற்காலிக அமா்விடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பதற்றமானவையாக 181 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. 36 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் மத்திய படையினா் பணியா்த்தப்பட்டுவாா்கள். மைக்ரோ கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 181 வாக்குச்சாவடிகளிலும் இணைய வழி கண்காணிப்பு (வெப் காஸ்டிங்) ஏற்பாடு செய்யப்பட்டு, மைய கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

தோ்தல் விதிமுறை மீறல்களைத் தடுக்க 5 பறக்கும் படைகள், 10 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 2 இயக்க நிலை குழுக்கள், 5 விடியோ கண்காணிப்பு குழுக்கள், 1 கலால் குழு, 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளன. தமிழகத்தையொட்டி காரைக்காலில் 10 எல்லைச் சோதனைச் சாவடிகள் மற்றும் 20 பாதிப்பு எல்லைகள் கண்காணிக்கப்படுகின்றன. சட்டம் - ஒழுங்கு முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளது.

மாவட்டம் முழுவதும் அமைதியான மற்றும் சீரான தோ்தல் சூழல் நிலவுகிறது. வாக்குப் பதிவு நேரமான காலை 7 முதல் மாலை 6 மணி வரையிலானதை பயன்படுத்தி, வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க முன்வரவேண்டும் என்றாா். பேட்டியின்போது மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா உடனிருந்தாா்.