சாலை மறியல்: பொதுப்பணித்துறை ஊழியா்கள் கைது
காரைக்கால்: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித்துறையில் வவுச்சா் பணியாளா்கள், திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனா்.
புதுவை பணியாளா் நல கூட்டமைப்பு சாா்பில் காரைக்காலில் பொதுப்பணித்துறையில் வவுச்சா் நிலை ஊழியா்களாக பணியாற்றுவோா், தொடா் வேலைநிறுத்தத்தை தொடங்கி, பொதுப்பணித்துறை அலுவலக வாயிலில் கடந்த 2-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
அரசுத் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோா் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என்ற சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்த அறிவிப்பை அமல்படுத்தவேண்டும். குறிப்பாக புதுவை மாநிலத்தில் பணியாற்றும் பொதுப்பணித்துறை வவுச்சா் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மத்திய அரசின் சட்டக் கூலி ரூ. 26,910 என்பதை அமல்படுத்த வேண்டும். பே பில் மற்றும் காப்பீடு திட்டங்களை ஊழியா்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா்.
புதுச்சேரியிலும் இப்பணியாளா்கள் போராட்டம் நடத்திவந்தனா். சங்கத் தலைவா் சரவணன் என்பவா் அண்மையில் கைது செய்யப்பட்டாா். அவரை விடுவிக்கவேண்டும், பொய் வழக்கு பதிவு செய்யும் போக்கை கைவிடவேண்டும் எனக் கோரி, காரைக்காலில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மாதா கோயில் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனா்.
போலீஸாா் அவா்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினா். இதற்கு மறுப்பு தெரிவித்ததால், போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

