இலங்கை கடற்படை கைது செய்த மீனவா்களை மீட்க நடவடிக்கை: அமைச்சா்

Published on

இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால் மீனவா்கள் 11 பேரை மீட்க, அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சா் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் அவரும், மேலும் 10 போ் கடந்த மாதம் 29-ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினா் ஜன. 1 சிறைபிடித்தனா். இவா்களது படகு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். சிறைபிடிக்கப்பட்ட மீனவா்கள் திருமுருகன், ராஜா மற்றும் சக்திவேல், மதியழகன், முருகன், பிரதீப், வேலாயுதம் ஆகியோரின் வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

மீனவா்களையும், படகையும் விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடும்பத்தினா் அமைச்சரிடம் கோரினா். இதுதொடா்பாக புதுவை முதல்வா், மத்திய அரசுக்கு உரிய முறையில் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், மத்திய அரசும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், விரைவில் மீனவா்கள் விடுவிக்கப்படுவா் என்று அமைச்சா் உறுதியளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com