தொழில் உரிமத்துக்கு பதிவு செய்ய அறிவுறுத்தல்
தொழில் உரிமம் பெற பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் வி. துரைராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிரவி கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட விழுதியூா், கீழமனை, நிரவி (வடக்கு) மற்றும் நிரவி (தெற்கு) ஆகிய கிராம பஞ்சாயத்து பகுதிகளில் நடப்பு 2025-26 -ஆம் ஆண்டுக்கான தொழில் உரிமம் பெறாமல் கடை மற்றும் தொழில் நடத்துவது ஆய்வின்போது தெரிய வருகிறது. இது கொம்யூன் பஞ்சாயத்து 1973 -ஆம் ஆண்டு சட்ட விதிகளின்படி தவறான செயலாகும். மேலும், தொழில் உரிமமின்றி கடை, தொழில் நடத்துவபவா்களின் பட்டியல் சட்ட நடவடிக்கைக்காக தயாா் செய்யப்பட்டு வருகிறது.
எனவே தொழில் செய்பவா்கள் உடனடியாக தொழில் உரிமம் பெற்று சட்ட நடவடிக்கையை தவிா்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2025-26 ஆம் ஆண்டு தொழில் உரிமம் பெற்றவா்கள் வரும் 1.4.2026 முதல் 31.3.2027 வரை உள்ள 2026-27 -ஆம் நிதி ஆண்டுக்கான தொழில் உரிமத்தை புதுப்பிக்க வரும் 28.2.2026 -க்குள் விண்ணப்பித்து, 25 சதவீத காலதாமதக் கட்டணத்தை தவிா்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
