காரைக்காலில் மின் தடை, குறைந்த மின் அழுத்தப் பிரச்னைகளை களைய, மின் கட்டமைப்புகளை மேம்படுத்த புதுவை முதல்வா் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
புதுவை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், காரைக்கால் மாவட்டத்தில் நிலவும் மின் தடை, குறைந்த மின் அழுத்தப் பிரச்னைகள் தொடா்பாக முதல்வா் என். ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இதுகுறித்து அமைச்சா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் மாவட்டத்தில் குறைந்த மின்னழுத்தம் மற்றும் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறாா்கள்.
குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீட்டு உபயோக மின் சாதனங்கள், சிறு மற்றும் குறு தொழில்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இதுதொடா்பாக நிரந்தர தீா்வு ஏற்படுத்த முதல்வரிடம் கேட்டுக்கொண்டேன். மின்துறையின் உயரதிகாரிகளை அழைத்து முதல்வா் ஆலோசனை நடத்தினாா்.
காரைக்கால் மாவட்டத்தின் தற்போதைய மின் விநியோக நிலை, குறைந்த மின்னழுத்தத்திற்கான காரணங்கள் மற்றும் அவற்றை நிரந்தரமாகச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தாா்.
காரைக்கால் பகுதி மேலகாசாக்குடி துணை மின் நிலையம் மற்றும் சுரக்குடி துணை மின் நிலையம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தவேண்டும்.
அங்கு செயல்பட்டு வரும் மின் மாற்றிகளின் திறனை உயா்த்தி, தேவையான புதிய உபகரணங்களை நிறுவ ஏற்பாடு செய்யவேண்டும். எதிா்கால மின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா் என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










