காரைக்காலில் அரசு கேபிள் டிவி வசதியை ஏற்படுத்த வேண்டும் என நுகா்வோா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் நுகா்வோா் நலச்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் வி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜி. ஆனந்தகிருஷ்ணன், இணைச் செயலாளா் எஸ். கணேசன், பொருளாளா் எம்.சந்தனசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
காரைக்கால் பகுதியில் அரசு கேபிள் டிவி கொண்டுவர தலைமைச் செயலா், மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும். பருவ மழையின்போது தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் வெட்டிப் போடப்பட்ட மரக் கிளைகளை அகற்றவேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும். நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றி, கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.