சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் நடந்த கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வைத்தீஸ்வரன் கோயிலில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இதனை தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இவ்வாறு இறங்குமுகமாக இருக்கும்போதுதான் பொதுமக்கள் கவனத்துடன் இருக்கவேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு 170 வரை இருந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 70 ஆக உள்ளது.
தமிழகம் முழுவதும் தினசரி கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தேர்தலுக்காக தொற்று பாதிப்பு குறைத்து காட்டப்படவில்லை. மும்பை, தாராவி, டெல்லி, கேரளம் போன்ற பகுதிகளிலும் கரோனா தொற்று எண்ணிக்கை நன்றாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க | அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்
இரண்டாவது அலையைவிட, மூன்றாவது அலையில் உயிர் இழப்பு மற்றும் பாதிப்பு விழுக்காடு அதிகளவு குறைவாக உள்ளதற்குத் தடுப்பூசி மக்கள் செலுத்திக்கொண்டதுதான் காரணம். அதோடு தற்போது முகக் கவசம்,சமூக இடைவெளி போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.
தமிழகத்தில் 1.34 லட்சம் படுக்கைகள் மருத்துவமனைகளில் தயார்நிலையில் உள்ள நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 சதவிகிதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இனி வரும் காலங்களில் பொதுமுடக்க விலக்குகள் அதிகமாக இருக்கும், கட்டுபாடுகள் குறைக்கப்படும்" என்றார்.
அப்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா, சீர்காழி கோட்டாட்சியர் ஜி. நாராணன் மற்றும் சுகாதாரத் துறையினர் உடனிருந்தனர். தொடர்ந்து சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வைத்தீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.