மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை-மகள் ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உறவினர் மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மயிலாடுதுறை ஐயாரப்பர் தெற்கு வீதியைச் சேர்ந்த குமரவேல் (38), அவரது மகள் சாய்சக்தி (3), உறவினர் மகன் நிதிஷ்குமார் ஆகியோர் மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் வந்தபோது, எதிரே மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இதையும் படிக்க | மயிலாடுதுறையில் தலைகீழாக நின்று போராட்டம்
இந்த விபத்தில் குமரவேலு, சாய்சக்தி, நிதிஷ்குமார் மூவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குமரவேல், சாய்சக்தி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களது உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் நிதிஷ்குமார் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து மயிலாடுதுறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.