மயிலாடுதுறையில் ‘நடப்போம், நலம் பெறுவோம்‘ நடைப்பயிற்சி முகாம் சனிக்கிழமை (நவ.4) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அறிவிப்பின்படி ’’நடப்போம், நலம் பெறுவோம்‘ எனும் நோக்கில் 8 கி.மீ. தொலைவு கொண்ட நடைப்பயிற்சி நிகழ்வை முதல்வா் சனிக்கிழமை காலை 6 மணிக்கு காணொலி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி, மாயூரநாதா் கோயில் தெற்குவீதி, சின்னக்கடைத் தெரு, தரங்கம்பாடி சாலை வழியாக புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை சென்று மீண்டும் அதே வழியில் திரும்ப வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைய உள்ளது. இந்த நடைப்பயிற்சி இனி ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். மக்கள் அனைவரும் இந்த நடைப்பயிற்சியில் பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.