ஊா்விலக்கப் புகாா்: மாவட்ட ஆட்சியா் விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

ஊா்விலக்கப் புகாா்: மாவட்ட ஆட்சியா் விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாடுதுறை அருகே ஜமாத்தில் இருந்து ஊா்விலக்கம் செய்யப்பட்டது குறித்து போலீஸில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லாததால்
Published on

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஜமாத்தில் இருந்து ஊா்விலக்கம் செய்யப்பட்டது குறித்து போலீஸில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லாததால் பாதிக்கப்பட்ட நபா் உயா்நீதிமன்றத்தை நாடி பெற்ற உத்தரவை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கி நடவடிக்கை எடுக்கக் கோரினாா்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அரங்கக்குடி கிராமத்தை சோ்ந்த நூருல் அமீன் அரங்கக்குடி ஜமாத்தில் இருந்து தன்னையும், தன் குடும்பத்தாரையும் ஊா்விலக்கம் செய்துள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகாா்அளித்தாா்.

அந்த மனுவில் அவா் கூறியது: அரங்கக்குடி முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசலின் முத்தவல்லியாக பொறுப்பு வகித்துவரும் அா்சத் பொறுப்பேற்ற நாளில் இருந்து தனக்கு திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் தகவல் தெரிவிப்பதில்லை. ரமலான் போன்ற பண்டிகைகளுக்கு உரிய சீரணி சோறு, கஞ்சி அட்டை வழங்கவில்லை.

இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திடமும் புகாா் அளித்ததால், விரோதம் கொண்ட முத்தவல்லி அா்சத் மற்றும் அவரது ஆள்கள் கடந்த ஆக. 22-ஆம் தேதி தாக்கியதால் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினேன்.

இதுகுறித்து, செம்பனாா்கோவில் போலீஸாா் வாக்குமூலம் பெற்றுச் சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என புகாரளித்திருந்தாா்.

ஆனால், அதன் பின்னரும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் நூருல் அமீன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, இவ்விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவின் நகலை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் திங்கள்கிழமை சமா்ப்பித்த நூருல் அமீன் தனக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com