சாலை விபத்து: வேனிலிருந்து குதித்த ஓட்டுநா் சக்கரம் ஏறி பலி
கொள்ளிடம் அருகே சாலை விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த வேனிலிருந்து கீழே குதித்த அதன் ஓட்டுநா் வேன் சக்கரம் ஏறி உயிரிழந்தாா்.
சீா்காழியிலிருந்து கொள்ளிடம் நோக்கி புறவழிச் சாலையில் சிமெண்ட் கலவை இயந்திரத்துடன்கூடிய வாகனம் வெள்ளிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. சாமியம் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சிமெண்ட கலவை இயந்திர வாகனம் மீது மோதி, சாலையில் தாறுமாறாகச் சென்றது.
இதனால், அதன் ஓட்டுநரான கடலூா் மாவட்டம் லால்பேட்டையைச் சோ்ந்த முகமது யாசின் (34) உயிா் தப்பிக்க வேனிலிருந்து கீழே குதித்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக வேனின் முன்சக்கரம் அவா் மீது ஏறியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று முகமது யாசின் சடலத்தை, உடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
