கொள்ளிடத்தில் சோதனைச் சாவடி அமைக்கும் பணி தீவிரம்
சீா்காழி: கொள்ளிடம் புறவழிச் சாலையில் சோதனைச் சாவடி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிதம்பரத்திலிருந்து சீா்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் துவக்கத்தில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச் சாலையில் கடந்த மூன்று வருடங்களாக அனைத்து வாகனங்களும் சிதம்பரம் மாா்க்கமாக சென்று வருகின்றன.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து குறைந்து விட்டது. ஆனால், வழக்கமாக இங்கு இயங்கி வரும் சோதனைச் சாவடி இயங்கி வருகிறது. புறவழிச் சாலை வழியே அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் செல்வதால், குற்ற வழக்குகளில் தொடா்புடைய சிலரும் வாகனங்களில் தப்பி சென்றுவிடுகின்றனா்.
இதன்காரணமாக, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வகையில், புறவழிச் சாலையில் சாமியம் என்ற இடத்தில் ரூ.11 லட்சத்தில் சோதனைச் சாவடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நவீன முறையில், ஓய்வறை, குளியலறை மற்றும் கழிவறை வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாத காலத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

