சீர்காழி அருகே பயிர்க் காப்பீடு வழங்காததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 60 விவசாயிகளை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சீர்காழி அருகேயுள்ள நாங்கூர் பகுதியில் 2016-17 ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை 80 சதவீதத்துக்குப் பதிலாக 11 சதவீதம் என தவறாக கணக்கீடு செய்யப்பட்டு, கணக்கீடு செய்யப்பட்ட காப்பீட்டு தொகை இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை விவசாயிகள் தொடர்புடைய அலுவலர்களிடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே ஆத்திரமடைந்த நாங்கூர் பகுதி விவசாயிகள் சீர்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயி மோகன்குமார் என்பவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அறிவிக்கப்பட்ட முழுக் காப்பீட்டு தொகையை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும், வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட அலுவலர்கள் உடனடியாக வரவேண்டும் என கோஷம் எழுப்பினர். இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட பழனி, குப்பு, வரதராமலிங்கம் உள்ளிட்ட 60 விவசாயிகளை போலீஸார் கைது செய்து மாலை விடுவித்தனர். மறியலால் சீர்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.