திருக்கடையூரை அடுத்த திருவிடைக்கழியில் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி புதன்கிழமை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவிடைக்கழி வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு உள்பட்ட விசலூர், திருவிடைக்கழி, உத்திரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
திருவிடைக்கழியில் உள்ள கூட்டுறவு வங்கி மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் முறைகேடாக ஏராளமான விவசாயிகளுக்கு குறைவாகவும் ஒருசில விவசாயிகளுக்கு மட்டும் எந்தவிதக் குறைவும் இன்றி வழங்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விவசாய சங்கத்தைச் சேர்ந்த கருணாகரன் தலைமை வகித்தார். கபிலன், குணசேகரன், செழியன், ஜீவானந்தம், கலைச்செல்வி ஆகியோர் உரையாற்றினர். போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.