நாகை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை (டிச.31) நடைபெறும் தொழில் முனைவோர்களுக்கான கூட்டத்தில், புதிய தொழில் முனைவோர்கள் பங்கேற்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியின் மூலம், புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி, தொழில்புரட்சி உருவாக்கும் வகையில் அதிக முதலீட்டில் ஏராளமான தொழிற்சாலைகளை அமைக்கும் நோக்கில் தமிழக முதல்வர் தலைமையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் ஜன.23, 24-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, நாகை மாவட்டத்தில் ரூ.100 கோடி அளவில் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ. 75 கோடி மதிப்பீட்டில், தொழில்கள் தொடங்க, 118 தொழில் முனைவோர்களுடன் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு, தமிழக அரசு முதலீட்டு மானியம், மின்சார மானியம், ஜெனரேட்டர் மானியம், வட்டி மானியம் போன்ற சலுகைகளை அளித்து வருகிறது. மேலும், புதிய தொழிற்சாலைகளுக்கான கட்டடம் கட்டுவதற்கு தேவைப்படும் உரிமங்கள், அனுமதி ஆகியவைகளை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இயங்கும் ஒற்றைச்சாளரக் குழுவின் மூலம் சுகாதாரத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சித் துறை, நகர ஊரமைப்புத் துறை, மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய பல்வேறு துறைகளிடமிருந்து உரிய காலக்கெடுவிற்குள் பெற ஆன்லைன் மூலம் எளிய வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய தொழில்களுக்கான முதலீட்டினை கொண்டு வரும் நோக்கில் திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மைக் கூட்டரங்கில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் இது தொடர்பான கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் பங்கேற்று, பயனடையலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








