சீர்காழி பகுதியில் பருத்திப் பயிரில் பூச்சித் தாக்குதல் தொடர்ந்து நீடிப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் , சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் பரவலாக 18 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பருத்தி 3 மாத பயிராக வளர்ந்துள்ளது. இந்நிலையில், தினந்தோறும் பருத்தி அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயினும், எதிர்பார்த்த அளவுக்கு பருத்தி பயிர் லாபம் கொடுக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
காரணம், பருத்திச் செடி வளர்ச்சியடைந்த ஆரம்பகால கட்டத்திலிருந்தே பூச்சித் தாக்குதல் தொடர்ந்து நீடித்துக் கொண்டேயிருக்கிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும், நிகழாண்டு பருத்தியின் விலை அதிகரித்துள்ளது. எனவே, பருத்தி சாகுபடியில் தீவிரம் காட்டிய விவசாயிகள், பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். இதனால், பருத்தி அறுவடையில் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியது:
சீர்காழி வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் பரவலாக பருத்தி சாகுபடி செய்துள்ளனர். ஆனால், பருத்திப் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து பார்த்தோம். ஆனால், மருந்தை தெளித்த 2 அல்லது 3 நாள்கள் மட்டுமே பூச்சிகள் கட்டுப்படுகின்றன. பின்னர், மீண்டும் தாக்கத் தொடங்கிவிடுகின்றன.
இதன் காரணமாக ஏக்கர் ஒன்றுக்கு தலா ரூ. 35,000 முதல் ரூ. 40,000 வரை நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பருத்திப் பயிரை இன்னமும் ஒரு மாதகாலத்துக்கு பாதுகாத்து, அறுவடை செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறோம். எனவே, இனிமேலாவது பூச்சித் தாக்குதலில் இருந்து பருத்தியைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








