சீர்காழி - கிராநல்லூருக்கு கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீர்காழி அருகேயுள்ள கீராநல்லூரில் நடைபெற்ற சீர்காழி வட்டார சுன்னத் வல் ஜமாஅத் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீராநல்லூர் பள்ளிவாசலில் நிகழ்ந்த உண்டியல் திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு நன்றி, கீராநல்லூருக்கு போதுமான பேரூந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசுப் போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் வலியுறுத்துவது, கீராநல்லூரில் சேதமடைந்துள்ள சாலைகள் சீரமைத்து தர, குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறையை அணுகுவது, சீர்காழி தென்பாதி பகுதியில் குடியிருக்கும் இஸ்லாமியர்களுக்கும், அரசு அலுவல் பணிக்காக வருகிறவர்களுக்காவும் கல்வி பயிலும் மாணவர்களுக்காகவும் புதிய பள்ளிவாசல் விரைவில் கட்டுவது, இதற்கான பணிகளை மேற்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகி நைனா முஹம்மது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கமாலுத்தீன் உஸ்மானி ஆலிம், ஜமாஅத் பொருளாளர் நிஷார் அஹ்மது , நிர்வாகிகள் ஜுபையர், நிசார், ஒருங்கிணைப்பாளர் யூசுப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய நிர்வாகிகள்: ஒருங்கிணைப்பாளராக யூசுப், மாவட்ட வழிகாட்டு உறுப்பினர்கள் ஹமீது மரைக்காயர், நாசர், காமில் , செயல் கமிட்டி உறுப்பினர்கள் ஒ. சிராஜூதீன், பேராசிரியர் ஹாஜா ஷரீப், அப்துல் ஜமீல், அமீன், நஜீர், ஃபியுதீன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.