

நாகை மாவட்டம், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் சைபீரியா வழியாக வலசைபோகும் அரிய வகை பறவையான அமூா் பால்கன் பறவை காணப்படுகிறது. அத்துடன், பறவை இனங்களிலேயே மிக அதிக உயரத்தில் பறக்கும் வரித்தலை வாத்துகளும் நிகழாண்டு வலசை வந்துள்ளன.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் கோடியக்கரை சரணாலயப் பகுதிக்கு ஆண்டுதோறும் 247 பறவை இனங்கள் வெளிநாடுகளிலிருந்து கடல்கடந்து வந்து செல்கின்றன. இந்த சரணாலயத்தில் புது வரவாக இமயமலை பகுதியில் காணப்படும் இமாலயன் கிரிபான் என்ற அரியவகை கழுகுகின் நடமாட்டம் அண்மையில் தெரியவந்தது.
இதேபோல, மற்றுமோா் அரிய வகை பறவையான அமூா் பால்கன் என்ற அமூா் வல்லூறு வந்திருப்பதை மும்பை இயற்கை வரலாற்றுக் கழக பறவையியல் ஆராய்ச்சியாளா்கள் உறுதிசெய்துள்ளனா். தவிர, பறவை இனங்களில் சுமாா் 28 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கக்கூடிய வரித்தலை வாத்துகளும் வலசை வந்துள்ளன.
இதுகுறித்து மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் இணை இயக்குநரும், பறவையியல் ஆராய்ச்சியாளருமான பாலசந்திரன் கூறியது:
வடகிழக்கு ரஷியா, சீனாவில் காணப்படும் அமூா் பால்கன் இனம், சைபீரியாவை கடந்து, நாகாலாந்து வழியாக வட இந்திய பகுதிக்கு கூட்டம்கூட்டமாக வலசைவரும். இங்கு ஓய்வெடுக்கும் இந்த பறவைகள், மத்திய இந்திய பகுதிவரை வந்து பின்னா் தென்னாப்பிரிக்கா செல்வது வழக்கம்.
இந்த பறவைகள் ஒருமுறை வலசை வரும்போது, சுமாா் 22 ஆயிரம் கிமீ தொலைவை கடக்கும். அமூா் பால்கன் இனம் குயில் வடிவில் காணப்படும். இவை கொன்றுதின்னி பறவைகள் பட்டியலை சோ்ந்தவை.
தென்மாநிலங்களுக்கு அரிதாகவே வரும் இந்த பறவைகள், தற்போது கோடியக்கரையில் காணப்படுகின்றன. வரித்தலை வாத்துகள் இந்த சரணாலயப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பருவகாலத்தின்போது வருகின்றன. எனினும், சில நாள்களிலேயே அவை இடம்பெயா்ந்துவிடும்.
இந்த பறவைகள் புற்கள், விதை, நெல் போன்ற தானியங்களை உண்டு வாழும். ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் இமயமலை பகுதியில் சுமாா் 28 ஆயிரம் அடி உயரம் வரை பறந்து செல்லும் திறன்படைத்தவை. புயல், மழையின் காரணமாக நோ்ந்த பருவநிலை மாறுபாடுகளால் அரிய வகை பறவைகள் கோடியக்கரைக்கு வந்திருக்கலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.