

குடும்ப செலவின் தேவைக்காக ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருவதாகக் கூறிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், விவசாயிகள் கால்நடை வளர்ப்பை உபத் தொழிலாக மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம், மருதூர் வடக்கு ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (டிச.26) நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தமிழக கைத்தரி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியது: ஆட்டுப்பால் உடல் ஆரோக்யத்துக்கு ஏற்றது. இதனால்தான் மகாத்மா காந்தி ஆட்டுப்பால் குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஆடு வளர்ப்பு நல்ல வருமானம் தரும் தொழில். இதனால் தான் எனது வீட்டில் பரண் அமைத்து ஆடுகள் வளர்க்கிறேன். மாடு, கோழிகளையும் வளர்க்கிறேன்.
இது குடும்பத் தேவைக்கு பெரும் உதவியாக உள்ளது.
பல நேரங்களில் நமக்கு டென்சன் ஏற்படும் நிலையில், வீட்டில் வளரும் நாய், ஆடு, மாடுகளை பார்க்கும் போது, அவை காட்டும் விசுவாசத்தை பார்த்தால் பதட்டம் குறைந்து மன அமைதி ஏற்படும்.
வருமானத்துக்காக மட்டுமல்ல மன அமைதிக்கும் கால்நடை வளர்ப்பு உதவும் என்றார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநர் சுமதி,ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பிைனர்கள் சுப்பையன் திலீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.