நியாயவிலைக் கடை முன்பு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை அகற்றக் கோரி புதுப்பட்டினத்தில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சீர்காழி அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சி தர்காஸ் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் இன்று தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூபாய் 2500 மற்றும் அரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு வழங்கும் நிகழ்வு தொடங்கியது.
இதற்காக நியாய விலைக் கடை அருகே அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் ஒருவர் டிஜிட்டல் பேனர் ஒன்றை நேற்று இரவு வைத்திருந்தார். அதில் நமது சின்னம் இரட்டை இலை என்ற வாசகத்துடன் பேனர் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் நியாய விலைக் கடை முன்பு டிஜிட்டல் பேனர் அமைக்கப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும் என நேற்று இரவு புதுப்பட்டினம் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தார். ஆனால் இன்று காலை வரை அந்த டிஜிட்டல் பேனர் அகற்றப்படவில்லை.
இதனிடையே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வு தொடங்கியது. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் திமுகவினர் அப்பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஒன்றிய குழுத் தலைவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது டிஜிட்டல் பேனரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து டிஜிட்டல் பேனர் அகற்றப்பட்டது. இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.