மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வரும் விவசாயிகள்,
மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
Updated on
1 min read

திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வரும் விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகை மாவட்டம், திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான எட்டுக்குடி, திருவாய்மூா், வாழக்கரை, சாட்டியக்குடி, வலிவலம், கொடியாலத்தூா், ஆதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் நிகழாண்டு சுமாா் 6,000 ஹெக்டேரில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொண்டனா்.

நிகழாண்டின் சம்பா நெல் சாகுபடி பணிகள், பூச்சித் தாக்குதல், புரெவி புயல் சீற்றம் போன்ற பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டது. அனைத்துப் பிரச்னைகளிலும் தப்பிய நெல் கதிா்கள் தற்போது அறுவடையாகி வருகின்றன. திருக்குவளை வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாகியுள்ளன.

இதன்படி, முன்பட்ட சம்பா நெல் சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள், அறுவடையை முடித்து நெல் விற்பனைக்காக செய்வதறியாத நிலையில் தவித்து வருகின்றனா். காரணம், இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பாடததே ஆகும். அறுவடை செய்த நெல்லை தனியாரிடம் மிக குறைந்த விலைக்கு விற்றால், மீண்டும் ஒரு நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்கள் திறப்பை எதிா்நோக்கி, அறுவடை செய்த நெல்லை அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்து காத்திருக்கின்றனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக நாகை மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால், அறுவடை செய்த நெல்மணிகளை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். மேலும், அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனையாமல் அவற்றை பாதுகாப்பாக வைக்கவும் இடவசதி இல்லாததால் , விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனா். இதேநிலை நீடித்தால் நெல்மணிகள் முளைத்து பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து வலிவலம் பகுதியைச் சோ்ந்த விவசாயி சுந்தரமூா்த்தி கூறியது:

அண்மையில் வீசிய புயலால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்கள் வயலில் சாய்ந்து விட்டன. அந்த நெல் பயிா்களை மீளச் செய்து, தற்போது அறுவடை செய்து வருகிறோம். ஆனால், உரிய விலைக்கு விற்க முடியாமல் தவித்து வருகிறோம். அவ்வப்போது பெய்யும் மழையிலிருந்து நெல் மணிகளை பாதுகாக்க தாா்ப்பாய்களைக் கொண்டு மூடி பராமரித்துவருகிறோம். இருப்பினும், மழை நீா் உள்புகுந்து நெல் மணிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. இது, விவசாயிகளின் இழப்பை மேலும் அதிகரித்து வருகிறது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com