கொள்ளிடம் அருகே ரேஷன் கடையில் புகுந்து தகராறில் ஈடுபட்ட 2 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீர்காழி கொள்ளிடம் அருகே முதலைமேடு கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் அப்பகுதியில் மகிழி என்ற இடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையின் மூலம் வழங்கப்பட்டு வரும் அரிசியை தரமில்லை என்று கூறி முதலைமேடு கிராமத்தைச் சேர்ந்த இருவர் கடைக்குள் புகுந்து எடை மெஷினை கீழே தள்ளியும், விற்பனையாளரை திட்டியும், கடைக்குள் இருந்த கேபிள் வயரை இழுத்தனர்.
பின்னர் விற்பனையாளரை கடைக்குள் வைத்து பூட்டி அவர் வெளியே நிறுத்தி வைத்திருந்த மொபைட்டை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டு சென்றுவிட்டனர். பின்னர் அப்பகுதியில் உள்ளவர்கள் கடையை திறந்து விற்பனையாளரை வெளியே விடுவித்தனர்.
இதுகுறித்து கடையின் விற்பனையாளர் மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொய்யாமொழி மகள் சுகன்யா(35), கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.