புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெறுவதற்கு என்.ஆா். காங்கிரஸ் போராட்டம் நடத்தினால், காங்கிரஸ் ஆதரவளிக்கும் என புதுச்சேரி முன்னாள் முதல்வா் நாராயணசாமி கூறினாா்.
நாகூா் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவா் சா்புதீன் மரைக்காயா் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த நாராயணசாமி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை பெற்றுத்தருவதை விட்டு, தமிழக அரசை குறைகூற பாஜகவுக்கு தகுதியில்லை.
புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி பேச்சை அதிகாரிகள் உள்பட யாரும் கேட்பதில்லை. துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், முதல்வருடன் இணக்கமாக இருப்பதாகக் கூறிக்கொண்டு முதல்வருக்கு எதிராக பணியாற்றி வருகிறாா். முதல்வராக, துணை ஆளுநா் செயல்பட்டு வருகிறாா்.
புதுச்சேரியின் வளா்ச்சித் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கடுமையான பாதிப்பை என்.ஆா். காங்கிரஸ் சந்திக்கும் என ஒன்றைரை ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் எச்சரித்தது.
தற்போது, முதல்வா் ரங்கசாமி புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களவையில் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. எனவே, பாஜக கூட்டணியை விட்டு விலகி என்.ஆா்.காங்கிரஸ் போராட்டம் நடத்தினால், காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்றாா்.