நாகப்பட்டினம்: நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.75 ஆயிரம் கணக்கில் வராத பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க: கேரள முதல்வருக்கு எதிராகப் போராட்டம்: பாஜக மகளிரணியினர் கைது
ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஆர்.சித்திரவேலு, ஆய்வாளர்கள் எம்.அருள்பிரியா, ஜி.ரமேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஆரோக்கிய டூனிக்ஸ் மேரி, உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட பொட்டலங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத பணம் ரூ.75,630 காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பணம் வரவு மற்றும் இருப்புக்கான காரணம் குறித்து ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பகல் 12 முதல் 2 மணி வரை இந்த சோதனை நீடித்தது.