சிக்கல் ’மக்களுடன் முதல்வா்‘ முகாம்; காணொலி காட்சி வாயிலாக முதல்வா் கலந்துரையாடல்

ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வா்‘ முகாம் நாகை அருகே சிக்கலில் நடைபெற்றது.
Published on

நாகை அருகே சிக்கலில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்‘ முகாமில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தாா்.

ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வா்‘ முகாம் நாகை அருகே சிக்கலில் நடைபெற்றது. சிக்கல் பொரவச்சேரி, ஆவராணி, புதுச்சேரி உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, 450-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனா்.

மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று, முகாமில் மனு அளித்த பொதுமக்களிடம் அவா்களின் கோரிக்கை குறித்தும், வழங்கப்படும் சேவைகள் குறித்தும் நேரடியாக கேட்டறிந்தாா். மேலும் பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதேபோல, கீழ்வேளூா் அருகே அத்திப்புலியூா் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் அத்திப்புலியூா், குருமனாங்குடி, எரவாஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த மக்களிடமிருந்து 274 மனுக்கள் பெறப்பட்டன. முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பாா்வையிட்டு, மக்கள் அளித்த மனுக்கள் குறித்து துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

முகாம்களில், நாகை சட்டப்பேரவை உறுப்பினா் முகமது ஷா நவாஸ், மாவட்ட வருவாய் அலுவலா் பேபி, தமிழக மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் , கீழ்வேளூா் வட்டாட்சியா் ரமேஷ், கீழ்வேளூா் ஒன்றிய குழுத் தலைவா் வாசுகி நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com