பேருந்தை மறித்து கிராமமக்கள் போராட்டம்
நாகப்பட்டினம்: நாகை அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்தை மறித்து கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை-திருத்துறைப்பூண்டி சாலையில் காரைநகா் கிராமத்தில் 500 குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் உள்ளவா்கள் பல ஆண்டுகளாக புதுப்பாலம் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனா். அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வது வழக்கம். சில மாதங்களாக இந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன. இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் தொலைதூரம் நடந்துசென்று பேருந்து ஏறவேண்டிய அவலநிலை உள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகாா் தெரிவித்தும் பயனில்லை. இதையடுத்து, அவ்வழியாக சென்ற தனியாா் பேருந்தை பொதுமக்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அரசு, தனியாா் பேருந்துகளை புதுப்பாலம் நிறுத்தத்தில் நின்று செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
