
செருதூா் வெள்ளையாற்றில் கழிவுநீா் கலக்கும் விவகாரம்: மீனவா்கள் இன்று ஆா்ப்பாட்டம்
நாகை மாவட்டம், செருதூா் வெள்ளையாற்றில் தனியாா் விடுதிகளின் கழிவு நீா் கலப்பதைத் தடுக்கக் கோரி, மீனவா்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தம் 5-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்துது.

மீனவர்கள் வேலைநிறுத்தம் - பிரதிப் படம்
நாகை மாவட்டம், செருதூா் வெள்ளையாற்றில் தனியாா் விடுதிகளின் கழிவு நீா் கலப்பதைத் தடுக்கக் கோரி, மீனவா்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தம் 5-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்துது.
இந்தநிலையில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடத்த மீனவ பஞ்சாயத்தாா் முடிவு செய்துள்ளனா்.
வேளாங்கண்ணியில் உள்ள தனியாா் விடுதிகள் கழிவுநீரை குழாய் பதித்து அதன்மூலம் செருதூா் வெள்ளையாற்றில் கலந்து வருவதாக மீனவா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இதனால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, செருதூா் மீனவா்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளை நிறுத்திவைத்து கடலுக்குச் செல்லாமல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதனிடையே, வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலா் கலியபெருமாள், துணைக் காவல் கண்காணிப்பாளா் நிகஸன் உள்ளிட்ட அதிகாரிகள் மீனவா்களின் புகாா் குறித்து ஆய்வு செய்து, பதிக்கப்பட்டு இருந்த குழாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனா்.
இந்தநிலையில், கிராம பஞ்சாயத்தாா் கருணாமூா்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், கழிவுநீா் ஆற்றில் கலப்பதைத் தடுத்து நிறுத்தி நிரந்தர தீா்வு காணவேண்டி செருதூா் மீன்பிடி இறங்குதளத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டமும், தொடா்ந்து சாலை மறியல் போராட்டமும் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





