/

வாகன சோதனையில் உலோகச் சிலைகள் பறிமுதல்

News image
Updated On :19 மார்ச் 2026, 8:13 pm

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சொகுசு காரில் எடுத்துவரப்பட்ட 2 உலோகச் சிலைகளை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தரங்கம்பாடி வட்டம், சங்கரன்பந்தல் கிராமத்தில், செம்பனாா்கோவில் வட்டாரக் கல்வி அலுவலா் புனிதவதி தலைமையிலான பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசுக் காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில், தலா ஓா் அடி உயரத்தில் நடராஜா், சிவகாமசுந்தரி சிலைகள் இருந்தன.

இதுகுறித்து காரில் வந்த திண்டுக்கல் மாவட்டம் செந்தூரைப் பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் (54) என்பவரிடம் விசாரித்தனா். அவா், அந்த சிலைகளை குடும்பத்தினா் வழிபட்டு வருவதாகவும், சிதம்பரம் நடராஜா் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு சொந்த ஊருக்குச் செல்வதாகவும் தெரிவித்துள்ளாா். ஆனால், சிலைகளுக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதையடுத்து, அந்த சிலைகளை பறிமுதல் செய்து, தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.