/

"மொழி வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும்'

தமிழ்மொழி வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என கும்பகோணம் அரசுக் கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. குணசேகரன் கூறினார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:28 pm

DIN

தமிழ்மொழி வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என கும்பகோணம் அரசுக் கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. குணசேகரன் கூறினார்.
மன்னார்குடியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மன்னார்குடி கிளை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற உலகத் தாய்மொழி தின சிறப்பு கருத்தரங்கில் அவர் பேசியது: அரசு வேலைவாய்ப்புகளில் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசுப் பணி என்ற நிலை உருவாகும்போதுதான் தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 
தாய்மொழி வழிக்கல்வி படித்தால், மாணவர்கள் பாடங்களை நன்கு உணர்ந்து, புரிந்து படித்து வளர்ச்சி பெறுவர் என்பதனால்தான் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
முக்கிய நோக்கமும், தொன்மையான நாகரிகம் உள்ள தமிழர்கள் தங்களின் தாய் மொழியையும், கலாசாரத்தையும் பாதுகாக்க பொறியியல், மருத்துவம், அறிவியல் ஆகிய துறைகளில் தமிழை வளர்க்க புதிய கலைச்சொற்களை உருவாக்க வேண்டும், அதில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும், தினசரி கூலிவேலைக்குச் சென்று அன்றாடம் பொருள்ஈட்டி வாழ்க்கை நடத்திவரும் அடித்தட்டு மக்கள் வசிக்கும் இடங்களில்தான் இன்றளவும் தாய்மொழி உயிர்ப்புடன் இருக்கிறது என்றார் அவர். 
கருத்தரங்கில், அமைப்பின் மாவட்டத் தலைவர் செ. அண்ணாதுரை, மாவட்டச் செயலர் ம. சந்திரசேகரன், கிளைத் தலைவர் செ. செல்வகுமார், செயலர் அ. முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக தமினின் தொன்மைக் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.