அரசு மருத்துவமனை புதிய கட்டட திறப்பு விழா: அழைப்பில்லை என எம்எல்ஏ குற்றச்சாட்டு
மன்னார்குடியில் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா குறித்து, தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர்


மன்னார்குடியில் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா குறித்து, தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் தகவல் தெரிவிக்கவில்லை, அழைப்பிதழும் வழங்கவில்லை என டி.ஆர்.பி. ராஜா குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மன்னார்குடி அரசு மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மாவட்ட தலைமை மருத்துவமனைக்குத் தேவையான பல உயர் சிகிச்சைப் பிரிவுகளும், அதிநவீன மருத்துவக் கருவிகளும் இருக்க வேண்டுமென்பது விதி. ஆனால், தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைக்கான எந்த அடிப்படை வசதியும் இல்லையென்பதால், மாவட்ட அரசு மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அமைத்துத் தர வேண்டுமென சட்டப் பேரவையில் தொடர்ந்து பேசியும், கோரிக்கை மனு அளித்தும், கடந்த ஏழு ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால், ஒரு சிடி ஸ்கேன் கூட அமைத்துத் தராதது வேதனையளிக்கிறது.
இம்மருத்துவமனை வளாகத்தில் அவசரச் சிகிச்சைப் பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த புறநோயாளிகள் பிரிவு, 109 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் ஆகியன ரூ. 2.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு, நீண்டகாலமாக திறக்காமலிருந்ததை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடியாக கட்டடத்தைத் திறக்க வேண்டுமென்றும், தவறும்பட்சத்தில் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அலுவலர்களிடம் தெரிவித்ததையடுத்து பிப். 20-ஆம் தேதி மருத்துவமனை கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் அரசு நிகழ்ச்சி நடைபெறும்போது, அத்தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் எனக்கு ( டி.ஆர்.பி. ராஜா) தகவல் அளிக்க வேண்டும். ஆனால், என்னுடைய அலுவலகத்துக்கோ, என்னிடமோ கட்டடத் திறப்பு விழா அழைப்பிதழ் தரவில்லை, தகவலும் கொடுக்கவில்லை. இந்நிலையில், புதிய கட்டடத்தைப் பார்வையிட, பிப்.21-ஆம் தேதி சென்று பார்த்தபோது, முன்பக்கம் கதவு பூட்டியிருந்தது. மேலும் கட்டடத்தின் உள்ளே எந்த மருத்துவக் கருவிகளும் பொருத்தப்படவில்லை. அவசரக் கோலத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமல் கட்டடத்தைத் திறந்து வைத்திருப்பதும், திறப்பு விழாவுக்கு மறுநாளே கட்டடத்தைப் பூட்டி வைத்திருப்பதும் வேதனையளிக்கிறது.
கட்டடம் திறப்பு விழா, கண்துடைப்பு விழாபோல் அமைந்துள்ளது. எனவே, மேலும் காலதாமதம் செய்யாமல் தேவையான மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள், நவீன கருவிகள், படுக்கைகள் என அனைத்து வசதிகளை விரைந்து செய்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...