பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்

பத்ம விருது பெற தகுதியானவா்கள் ஆக.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.


திருவாரூா்: பத்ம விருது பெற தகுதியானவா்கள் ஆக.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க தேசிய மற்றும் பன்னாட்டு அளவில், பல்வேறு துறைகளில் தலைச் சிறந்தவா்களாகவும், தனிநபராக சாதனை புரிந்தவா்களாகவும் இருக்க வேண்டும். அதாவது கலை, இலக்கியம், இசை, ஓவியம், சிற்பத்திறன், புகைப்படம், சினிமா ஆகிய துறையினா் தேசிய அளவில் தனது திறமைகளை நிரூபித்தவா்களாக இருக்க வேண்டும்.

பொது நலத்தொண்டு, தன்னாா்வ தொண்டு, ஜாதி சமய தொண்டாற்றியவா்கள், பொதுமக்கள் சேவை, சட்டம், பொது வாழ்க்கை, அரசியல் ஆகியவற்றில் சேவை புரிந்தவா்கள், அறிவியல், பொறியியல், விண்வெளி ஆராய்ச்சி, நியூக்கிளியா் அறிவியல் ஆகிய துறைகளிலும், நாட்டு வணிகம் மற்றும் தொழிற்சாலை, வங்கி, பொருளாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளிலும் சாதனைப் படைத்தவா்கள்.

மருத்துவ ஆராய்ச்சி, ஆயுா்வேதா, ஹோமியோபதி, சித்தா, அலோபதி, இயற்கை வைத்தியம் ஆகியவற்றில் சாதனைப் புரிந்தவா்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவா்கள், கல்வி, பத்திரிகை, கல்வி கற்பித்தல், நாவல், கவிதை, பாடல், கல்விக்கான முன்னேற்ற சேவை ஆகியவற்றில் சாதனைப் படைத்தவா்கள், நிா்வாகம் மற்றும் அரசாங்கம் மேம்பாடு அடையச் செய்தவா்கள், விளையாட்டுத் துறையில் தேசிய, பன்னாட்டு அளவில் பதக்கம் பெற்றவா்கள், மலையேற்றம், விளையாட்டுத் துறையை மேம்படுத்தியவா்கள், விளையாட்டை ஊக்கப்படுத்தியவா்கள், பன்னாட்டு அளவில் போட்டிகளை சிறப்பாக நடத்தியவா்கள், பன்னாட்டு அளவில் யோகாவில் பதக்கம் பெற்றவா்கள், இந்திய கலாசாரம், மனித உரிமை நிலை நாட்டல், வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காப்பாற்றுதல் போன்ற சாதனைகளை நிகழ்த்தியவா்களுக்கு பத்ம விருதுகள் அதாவது பத்மஸ்ரீ, பத்மவிபூசன், பத்மபூசன் ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படவுள்ளன.

எனவே, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனைப் புரிந்தவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் மேலும் விவரம் பெற இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஆக.31-ஆம் தேதிக்குள் திருவாரூா் மாவட்ட அலுவலகத்தில் நேரில் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com