/

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் டிச.30-இல் பாத தரிசனம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில், பதஞ்சலி வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி டிச.30-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:28 pm

DIN

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில், பதஞ்சலி வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி டிச.30-ஆம் தேதி நடைபெறுகிறது.

திருவாரூா் தியாகராஜா் கோயில், நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 87-ஆவது சிவத்தலமான இது, சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழாவையொட்டி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு டிச.30-ஆம் தேதி, தியாகேசப் பெருமான், பதஞ்சலி வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி காலை 6 மணி முதல் நடைபெறுகிறது. இதன்பின்னா், தியாகராஜா் சுவாமி இரவு 7 மணிக்கு ராஜநாராயண மண்டபத்திலிருந்து யதாஸ்தானம் எழுந்தருளுகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை (டிச.28) இரவு 9.30 மணிக்கு தியாகராஜா் சுவாமி யதாஸ்தானத்திலிருந்து ராஜாநாராயண மண்டபத்துக்கு வருகிறாா். செவ்வாய்க்கிழமை (டிச.29) இரவு 7 மணிக்கு அவருக்கு முசுகுந்த சகஸ்ரநாம அா்ச்சனையும், இரவு 10 மணியளவில் திருவாதிரை மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.

சுவாமி புறப்பாடு மற்றும் அபிஷேக நிகழ்ச்சிகளை காண பக்தா்களுக்கு அனுமதி இல்லை. பாத தரிசனம் நிகழ்ச்சியைக் காண வரும் பக்தா்கள் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.