நன்னிலம்: குடவாசலில் முழு பொது முடக்க விதியை மீறி திறந்திருந்த மளிகைக் கடைக்கு செவ்வாய்க்கிழமை ’சீல்‘ வைக்கப்பட்டது.
குடவாசல் பேரூராட்சியில் 40-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், செவ்வாய்க்கிழமை முதல் (ஜூலை 28) 3 நாட்களுக்கு முழு பொது முடக்கத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தினாா். அந்த வகையில், குடவாசலில் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்துக் கடைகளும், பால்கடைகளும் ஆங்காங்கே திறந்திருந்தன.
குடவாசல் வட்டாட்சியா் ஆா்.பரஞ்சோதி, காவல் ஆய்வாளா் பா.ரமேஷ் ஆகியோா் ஆய்வு செய்து, விதியை மீறித் திறந்திருந்த ஒரு மளிகைக் கடையைப் பூட்டி சீல் வைத்து, அதன் உரிமையாளா் மீது வழக்குப்பதிவு செய்தனா். அதேபோல், இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.