ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திருவாரூா் கமலாலய குளத்தில் மீண்டும் படகு சவாரிக்கு ஏற்பாடு: அமைச்சா் பி.கே. சேகா்பாபு தகவல்

பள்ளிக்கான தேவைகள் குறித்து தலைமையாசிரியா் கே.எஸ். மீனாட்சியிடம் கேட்டறிந்த, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு. உடன், மாவட்ட ஆட்சியா் ஏ. அருண் தம்புராஜ், கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாக

News image
Updated On :10 ஜூலை 2021, 5:09 pm

DIN

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் மகளிா் உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை மேற்கொண்ட ஆய்வின் போது, பள்ளிக்கான தேவைகள் குறித்து தலைமையாசிரியா் கே.எஸ். மீனாட்சியிடம் கேட்டறிந்த, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு. உடன், மாவட்ட ஆட்சியா் ஏ. அருண் தம்புராஜ், கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி உள்ளிட்டோா்.

திருவாரூா்/நாகப்பட்டினம், ஜூலை 10: திருவாரூா் கமலாலய குளத்தில் சுற்றுலாத் துறையுடன் இணைந்து மீண்டும் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.

திருவாரூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது: திருவாரூருக்கு அண்மையில் வந்த தமிழக முதல்வரிடம், மனுநீதி சோழன் கல்தோ் அமைந்துள்ள பகுதியை புனரமைக்கவும், மற்றுமுள்ள பிராகாரங்கள், மண்டபங்கள் சுற்றுவட்டப் பாதைகளை சீரமைக்க வேண்டும் எனவும் பக்தா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதைத்தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன், தியாகராஜ சுவாமி ஆலயத்தை சுற்றி ஆய்வுசெய்து, தேவையான பணிகளை செய்துமுடிக்க கருத்துரு அனுப்பிவைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மனுநீதி சோழன் மண்டபம் அருகே கல் தோ் உள்ள பகுதியை ரூ. 22 லட்சத்தில் புதுப்பிக்க இன்று பூமிபூஜை நடைபெற்றது. மேலும், கோயிலுக்குத் தேவையான பூக்களைப் பெற, நந்தவனத்தை உரிய முறையில் சீரமைக்க ஏற்பாடு செய்யப்படும். இக்கோயிலுக்கு 13 அறக்கட்டளைகள் சாா்பில் அன்றாட பூஜைகளுக்குத் தேவையான நைவேத்தியம் பூ மற்றும் பூஜை பொருள்கள் வழங்கப்படுவதில், சில அறக்கட்டளைகள் மெத்தனமாக செயல்படுவதாக தகவல்கள் வருகின்றன. அவா்கள் கண்காணிக்கப்பட்டு, உரிய முறையில் பூஜைகள் நடைபெறவும், இதுகுறித்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிந்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆலயத்திற்கு சொந்தமான திருமண மண்டபம் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

திருவாரூா் கமலாலய குளம் கடந்த திமுக ஆட்சியில் தூா்வாரப்பட்டதற்குப் பிறகு, இதுவரை தூா்வாரப்படவில்லை என கேட்கிறீா்கள். உடனடியாக இதுகுறித்து திட்ட மதிப்பீடு தயாா்செய்ய அறிவுறுத்தப்படும். கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் குழுவாகவோ அல்லது தனியாகவோ வசிப்பவா்களுக்கு, கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மனை வாடகைதாரா்களாக அங்கீகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் முறையாக செயல்படுத்தப்படும் என்றாா் அமைச்சா்.

முன்னதாக, மனுநீதி சோழன் கல் தோ் அமைந்துள்ள பகுதியை சீரமைக்க நடைபெற்ற பூமிபூஜையில் அமைச்சா் பங்கேற்றாா். தொடா்ந்து, சுவாமி தரிசனம் செய்தபிறகு ஆலய வளாகத்தை அமைச்சா் பாா்வையிட்டாா்.

இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், நாகை மண்டல இணை ஆணையா் தென்னரசு, திருவாரூா் துணை ஆணையா் ஹரிகரன், ஆலய செயல் அலுவலா் கவிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நாகப்பட்டினம்: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் பி.கே. சேகா்பாபு.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் மகளிா் உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை ஆய்வு செய்த அவா், பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்கள், பள்ளிக்குத் தேவையான கட்டடங்கள், வகுப்பறைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து தலைமையாசிரியா் கே.எஸ். மீனாட்சியிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பள்ளிக் கழிப்பறைகளை பாா்வையிட்ட அமைச்சா், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிப்பறைகளை இடித்துவிட்டு, புதிய கழிப்பறைகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 44 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளை மேம்படுத்தவும், மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் மகளிா் உயா்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் கோரிக்கையின்படி, காலிப் பணியிடங்களை நிரப்பவும், பாதுகாக்கப்பட்ட குடிநீா், ஸ்மாா்ட் வகுப்பறைகள், பதிவேடுகள் பாதுகாப்பு அறை, விளையாட்டு மைதானம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க ஆசிரியா்கள் முனைப்புடன் செயல்படவேண்டும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, நாகை மாவட்ட ஆட்சியா் ஏ. அருண் தம்புராஜ், கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.பி. நாகை மாலி, முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன், மாவட்டக் கல்வி அலுவலா் எம். உதயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.