திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், மாவட்ட நாகசுரம், தவுல் மற்றும் கிராமிய கலைஞர்கள் நலச் சங்கம் சார்பில், ஏழ்மையான கலைஞருக்கு நாதஸ்வரம் வழங்கப்பட்டது.
கூத்தாநல்லூர் காளியம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்விற்கு, மாவட்ட துணைத் தலைவர் ஏ.அரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ஏ.இளையராஜா முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் ஏ.பரமசிவம் வரவேற்றார்.
இந்த நிகழ்வில் சின்ன கூத்தாநல்லூரைச் சேர்ந்த, ஏழ்மையான நாகசுர கலைஞர் சேகர் என்பவருக்கு, ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள நாகசுரக் கருவியை, மாவட்டச் செயலாளர் டி.என்.ரகுநாதன் வழங்கினார்.
இதையும் படிக்க | சீர்காழி: படகு கவிழ்ந்து மீனவர் பலி
அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்டச் செயலாளர் ரகுநாதன், கரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து, பெரும் பாதிப்புக்கு ஆளானவர்கள் நாகசுரம், தவுல், நையாண்டி மேளக் கலைஞர்கள், கரகாட்டக் கலைஞர்கள், சிவன், காளி வேட கலைஞர்கள், பேண்டு வாத்தியர்கள் மற்றும் கிராமியக் கலைஞர்கள்தான்.
பாதிக்கப்பட்ட நாகசுரம், தவுல் மற்றும் கிராமியக் கலைஞர்கள் அனைவருக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என, முதல்வருக்கு தெரிவிக்கக் கோரி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர் கலை பண்பாட்டுத் துறையின் துணை இயக்குனரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கலைஞர்களுக்கும் நல வாரியக் கார்டு மற்றும் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட வேண்டும். சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
எளிமையாக நடந்த நிகழ்வில், கிளைப் பொருளாளர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.