

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரீயில் 33 அடி உயர சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சனேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் கிராமத்தில் ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானத்தின் ஞானபுரீ சித்திரகூட சேத்திரம் ஸ்ரீ மங்கல மாருதி ஆஞ்சனேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆஞ்சநேயருக்கு இருபுறமும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், 
ஸ்ரீ கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், பவ்ய ஆஞ்சனேயர் சுவாமிகள் எழுந்தருளியுள்ளனர். இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சனேயர் இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.
இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கி, மங்களம் உண்டாகும். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் இக்கோவிலின் ஸ்தாபகரும், தர்ம அதிகாரியுமான ரமணி அண்ணா நங்கநல்லூர், பஞ்சவடி, மூன்றாவதாக ஞானபுரீ ஸ்ரீ சித்திரகூட சேத்திரம் சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சனேயர் சுவாமி கோவிலை ஸ்தாபித்தார்.
அவர் அனுமன் ஜெயந்தி விழாவை ஆரம்பித்து ஐம்பதாவது பொன்விழா ஆண்டாக இவ்வாண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அனுமன்ஜெயந்தி- மார்கழி அமாவாசை மூல நட்சத்திரம் கூடிய ஞாயிற்றுக்கிழமை அனுமன் ஜெயந்தி விழா அதிவிமரிசையாக நடைபெற்றது.
அதனை முன்னிட்டு ஆஞ்சனேயர் சுவாமி பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆஞ்சநேய சுவாமிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலையில் கோவில் மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி சுவாமியை ஆராதனை செய்தனர்.
கோவிலுக்கு வருகைதந்த பக்தர்கள் அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் பிரசாதமாக வழங்கப்பட்டது. அனுமன் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்ம அதிகாரி ரமணி அண்ணா, திருமடத்தில் ஸ்ரீகாரியம் சந்திரமவுலீஸ்வரர் மற்றும் அறங்காவலர் ஜெகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.