நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, ஆளுநரைக் கண்டித்து திருவாரூரில் திமுக இளைஞரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், நீட் தேர்வால் இனத்தின் வளர்ச்சி தடைபடுகிறது.
ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் வளர்ச்சிக்காக, இனத்தின் வளர்ச்சிக்காக திமுக என்றும் பாடுபடும். அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு அகற்றப் பட்டு திமுக தலைவர் கை காட்டும் நபர் மத்தியில் ஆட்சியில் அமர்வார்.
அப்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதுவரையிலும் திமுகவின் போராட்டம் தொடரும் என்று பேசினார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.