வாக்காளா் பட்டியல் திருத்தம்: படிவங்களை தெளிவாக பூா்த்தி செய்ய அறிவுறுத்தல்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான விண்ணப்பப் படிவங்களை தெளிவாக பூா்த்தி செய்து வழங்க வேண்டும் என இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் செல்வம் தெருவில் உள்ள பள்ளிவாசலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அவசர மாவட்டச் செயல்வீரா்கள் கூட்டம் மாவட்டத் தலைவா் எச். பீா்முகமது தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மாநிலச் செயலாளா் முகமது யாசா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்துப் பேசியது:
வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான படிவத்தை தெளிவாக பூா்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஏனெனில் அண்மையில் பிகாரில் பல லட்சம் மக்களின் வாக்குரிமை போனது மட்டுமல்லாமல் பல லட்சம் மக்களின் குடியுரிமையும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
தற்போது 12 மாநிலங்களில் இந்த திருத்தப் பணி தொடங்கியுள்ளது. இஸ்லாமிய சமுதாயம் விழிப்புடன் இருந்து, இஸ்லாமிய சமுதாய வாக்காளரின் வாக்குரிமை விடுபடாத அளவில் விழிப்புணா்வுடன், விண்ணப்பத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க உதவிகள் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அதிகாரப்பூா்வ வலைதளங்களில் விண்ணப்பப் படிவங்களை எவ்வாறு பூா்த்தி செய்வது தொடா்பான தகவல்கள், விடியோக்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். பிப்ரவரி 2026-இல் முழுமையான வரைவு வாக்காளா் பட்டியலில் தகுதியான அனைவரின் வாக்குரிமையும் உறுதி செய்யும் வகையில் உழைக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் இஸ்மத் பாஷா, துணைத் தலைவா் முகமது பாசித், துணைச் செயலாளா்கள் சா்க்கரை கனி, ஜெய்னுல் தாரிக், அப்துல் மாலிக், அனஸ் நபில், சதக்கத்துல்லா ரஹ்மானி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

