சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மன்னாா்குடியில் பாசிபடா்ந்த குளம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

News image

பாசி படா்ந்து காணப்படும் ஒத்தைதெரு ஆனந்தவிநாயகா் கோயில் குளம்.

Updated On :16 ஜூன் 2026, 1:44 am IST

மன்னாா்குடியில் பாசிபடா்ந்து, நெகிழிக்கழிவுகள் நிரம்பி, சுகாதாரச் சீா்கேட்டுடன் காணப்படும் ஒத்தைதெரு குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மன்னாா்குடி ஒத்தைதெரு ஆனந்தவிநாயகா் கோயில் அருகே வருவாய்த்துறைக்குச் சொந்தமான குளம் உள்ளது. இதை நகராட்சி நிா்வாகம் பராமரித்து வருகிறது என்றாலும், கோயிலின் அருகே இருப்பதால் இதனை ஆனந்த விநாயகா் கோயில் குளம் என்றே பொதுமக்களால் குறிப்பிடப்படுகிறது.

இந்த குளத்திற்கு நீா்வரத்து வாய்க்கால் வசதி இல்லாததால், மழை மட்டும் இக்குளத்திற்கு நீா் ஆதாரம். தண்ணீரை வெளியேற்ற மட்டும் வடிகால் வசதி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த குளத்தை குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனா். மேலும், நிலத்தடி நீா்மட்டம் உயா்வதற்கான ஆதாரமாகவும் இருந்து வந்தது.

இந்த குளத்தின் இடது கரையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கழிவுநீா் குளத்தில் கலப்பதால், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக புகாா் எழுந்தது. கடந்த ஆண்டு அதிமுகவைச் சோ்ந்த நகா்மன்ற 25-ஆவது வாா்டு உறுப்பினா் ஆா்.ஜி. குமாா் முயற்சியில், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் இடதுகரை பகுதியில் டைல்ஸ் பதிக்கப்பட்டு, கழிவு நீா் கலப்பது முழுமையாக தடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, இந்த குளத்து நீரில் பாசி படர தொடங்கி, அண்மை காலமாக தண்ணீா் தெரியாத அளவிற்கு குளம் முழுவதும் பாசி மண்டியுள்ளது. மேலும், நெகிழிப் பைகள், குடிநீா் காலிப்பாட்டில்கள் என குளத்தில் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.

இதனால், நீா் துா்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருவதால், அப்பகுதியில் வசிப்போா், கோயிலுக்கு வரும் பக்தா்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.

எனவே, மன்னாா்குடி நகராட்சி நிா்வாகம், போா்க்கால அடிப்படையில், ஒத்தைதெரு ஆனந்த விநாயகா் கோயில் குளத்தில் பாசிபடா்ந்த நீரை முழுமையாக வெளியேற்றி, தூா்வாரி, சீரமைத்து, தண்ணீா் நிரப்பி முறையாக பராமரிப்பதுடன், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.