/

தௌலா குவானில் கருமாரியம்மனின் அருள்கோலம்!

புது தில்லி, செப். 12: தமிழர்களின் தெய்வமான மாரியம்மனை வழிபடுவதிலும், அவளுக்கு நேர்த்திக் கடன் செலுத்திப் பார்ப்பதிலும் மனம் பூரிப்படையாத கிராம மக்களே இல்லையென்று சொல்லலாம். பட்டி தொட்டியெல்லாம் வாழுக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:22 am

வே.சுந்தரேஸ்வரன்

புது தில்லி, செப். 12: தமிழர்களின் தெய்வமான மாரியம்மனை வழிபடுவதிலும், அவளுக்கு நேர்த்திக் கடன் செலுத்திப் பார்ப்பதிலும் மனம் பூரிப்படையாத கிராம மக்களே இல்லையென்று சொல்லலாம்.

பட்டி தொட்டியெல்லாம் வாழுகிற கிராம மக்களின் நம்பிக்கை தெய்வம் அவள். தமிழகத்தில் மட்டுமா அவள் அருளாட்சி நடத்துகிறாள்! அல்லவே.

தில்லியின் தெற்குப் பகுதி தௌலா குவானிலும் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் குடிகொண்டு அருள்பாலித்து வருகிறாள் அம்மன்.

"திருவேற்காடு மாரியம்மன்' கோயில் போன்று இக்கோயில் அருள்மிகு  கருமாரியம்மன் பாதத்தில் முண்டகக் கண்ணி வீற்றிருக்கிறாள். அதனால், இக்கோயிலை இப்பகுதி பக்தர்கள் "வட திருவேற்காடு' என்று அழைக்கின்றனர்.

இக்கோயில் இங்கு உருவானதே ஒரு அற்புத நிகழ்வுதான். தற்போது அமைந்துள்ள இக்கோயில் அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடப் பணி நடைபெற்றது.

இப்பணிக்காக சென்னையைச் சேர்ந்த குமாரசுவாமி உள்ளிட்ட சிலர் வந்தனர். இரவில் கட்டடப் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் குமாரசுவாமியின் கனவில் தோன்றிய அம்மன் தனக்குக் கோயில் எழுப்புமாறு பணித்தாள் என கூறப்படுகிறது. அதன்பிறகே, இங்கு கருமாரியம்மன் கோயில் எழுப்பி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

இது குறித்து இக்கோயில் பொறுப்பாளர் எஸ். குமாரசுவாமி கூறியது:

""1978-ம் ஆண்டு இப்பகுதியில் ஒரு ஹோட்டல் கட்டுமானப் பணிக்காக சென்னையில் இருந்து நான் உள்பட பலர் வந்திருந்தோம்.

கட்டட அஸ்திவார இடத்தில் இரவில் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது, எனது கனவில் சூலாயுதத்துடன் அம்மன் தோன்றினாள். தான் இப்பகுதியில் குடிகொண்டு இருப்பதாகவும், தனக்கு வழிபாடு நடத்த வேண்டும் என்றும் பணித்தாள்.

அதன்பிறகு, நானும் சிலரும் சேர்ந்து மூன்று செங்கற்களை வைத்து இக்கோயிலை உருவாக்கினோம். அப்போதெல்லாம் இப்பகுதி காடு போன்று இருந்தது. பல ஆண்டுகளாக இங்கு வழிபாடு நடத்தி வருகிறோம். இது ரயில்வே இடமும் கூட. இங்கு வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறி வருவதால் பக்தர்களே கோயிலில் அருள்பாலிக்கும் தெய்வச் சிலைகளை வழங்கியுள்ளனர்.

கோயில் வளாகத்தில் உள்ள புற்றில் கருநாகம் அடிக்கடி வந்து செல்லும்.  கோயிலில் ஆடி மாத பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு 33-வது ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.

பால்குடம், தீமிதி விழாவில் மும்பை, சென்னை, ஜெர்மனி, இத்தாலி, ஹைதராபாத் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

திருவிளக்கு பூஜை, அன்னதானம் நடைபெற்றது.  மாசி மாதத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். வசந்த நவராத்திரி உற்சவம் 9 நாள்கள் நடத்தப்படும். சித்ரா பௌர்ணமியில் விளக்குப் பூஜை நடைபெறும்.

வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் குறி சொல்லப்படும். என் மீது அம்மன் அருள்வந்து குறி சொல்லி வருகிறேன். வேண்டுதல் நிறைவேறுவதால் பலரும் கோயிலுக்கு வருகின்றனர்.  இங்கு வழிபடுவோருக்கு திருமணத் தடை நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை உள்ளது. திருமணத் தடை நீங்க பெண்கள் மஞ்சள் துணியில் எழுதி இங்குள்ள மரத்தில் கட்டிவிட்டுச் செல்வர். நோய்கள் நிவர்த்தி வேண்டியும் பலர் இங்கு வந்து வழிபடுகின்றனர். கோயில் பணிகளுக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கரண்சிங் உதவி வருகிறார். தற்போது, கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.  கருமாரியம்மனின் சன்னிதிக்கு அடித்தளம் போட்டுள்ளோம். கட்டடப் பணியை மேற்கொள்ள ரூ. 21 லட்சம் செலவு ஆகும். அதற்கு அம்மன்தான் அருள்புரிய வேண்டும்'' என்றார் அவர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.