மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் முட்தோலிகள் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் ராமநாதபுரம் தொகுதி அதிமுக உறுப்பினர் அ.அன்வர்ராஜா வலியறுத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவர் வியாழக்கிழமை முன்வைத்த கோரிக்கை:
இலங்கை கடற்படையினரின் தாக்குதல் காரணமாக உயிர்களையும், படகுகளையும் இழந்து தமிழக மீனவர்கள் மிகுந்த இழப்பை சந்தித்து வருவது குறித்து பிரதமரின் கவனத்திற்கு தமிழக முதல்வர் தொடர்ந்து எடுத்துச் சென்று வருகிறார். மீன் பிடிப்பதிலும், விற்பனையிலும் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் பிடிக்கும் கடல் வெள்ளரி அல்லது முட்தோலிகளை இந்திய வனத் துறை, சுற்றுச்சூழல் விதித்துள்ள தடையின் காரணமாக கையாள முடியாத நிலை உள்ளது. இந்திய பாதுகாப்பு மற்றும் சிவில் ஊழியர்களுடன் சேர்ந்து இந்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை போன்ற மத்திய அரசின் அமைப்புகளின் அநீதி அதிகாரத்தால் மீனவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
1982-ஆம் ஆண்டு, வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் மூலம் சிறிய அளவிலான கடல் வெள்ளரிகளைப் பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால், 2001-இல் கடல் வெள்ளரிக்கு முழுத் தடை விதிக்கப்பட்டது. மேலும், அரிதான உயிரினமாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கடல் வெள்ளரியானது தென்கிழக்கு கடற்கரைப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. உண்மையில், இது அரிதான உயிரினமும் இல்லை. இந்த வகை உயினத்திற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உணவுக்கும், மருந்துக்கும் அதிக தேவை உள்ளது. எனவே, மீனவர்களின் வாழ்வாதார நலன் கருதி கடல் வெள்ளரி அல்லது முட்தோலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.